மே, 15 உலக குடும்பதின சிறப்புக்கட்டுரை குடும்பம் எனும் ஆனந்த நிலையம் முனைவர் சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி, 9952140275 எல்லோரையும் இணைத்து வைத்திருக்கும் ஒற்றுமைச் சங்கிலி குடும்பம், உறவுகளின் வரவைக் கற்றுத்தருவது குடும்பம்தான். அனுபவ ஞானம் தரும் போதிமரமும் குடும்பம்தான். கணவன் மனைவி, குழந்தைகள், தந்தை தாய், சகோதர சகோதரிகள், மாமன் மாமி, சித்தப்பா சித்தி, தாத்தா பாட்டி என்று உறவுகளின் உன்னத ஆலயம் குடும்பம். அமைதி நிலவும் ஆனந்த நிலையமும் குடும்பம்தான். அன்பும் பாசமும் நேயமும் விட்டுக்கொடுத்தலும் குடும்பத்தின் உயரிய மதிப்பீடுகள். பொறுமையையும் விட்டுக் கொடுத்தலையும் குடும்பம் கற்றுத் தருகிறது. பிறவியாகிய பெருங்கடலைக் கடக்க உதவும் தெப்பம் குடும்பம்தான். உறவுகளால் கோர்த்துக் கட்டப்பட்ட பாசக் கதம்பம் குடும்பம். நெஞ்சுக்குள் நுழைகிற பாசமொழியைக் குடும்பங்களே கற்றுத்தருகின்றன. இடைவெளிகளை இட்டுநிரப்பும் இனிய பணியைக...